பட்டப்பகலில் அகாலி தளக் கட்சியின் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொல் லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்தவர் விக்ரம்ஜித் சிங் என்ற விக்கி மிடுகெரா (32). அகாலிதளம் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றுக்கு சென்றுவிட்டு, தனது பார்ச்சுனர் காரில் ஏறுவதற்காக திரும்பினார்.
கார் கதவைத் திறக்கும்போது, அருகில் இருந்து ஓடி வந்த முகமூடி அணிந்த இரண்டு பேர், அவரை சரமாரியாக சுட முயன்றனர்.

உடனடியாக சுதாரித்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவர்கள் விடாமல், விக்ரம்ஜித் சிங்கை விரட்டிய படியே ஓடினர். பின்னர் அவரை சரமரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்ரம்ஜித் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், அவர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் இந்தக் கொலையை செய்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தபோது, பிரபல தாதாவான தேவிந்தர் பாபியா கோஷ்டி, பேஸ்புக் பக்கத்தில், அவரைக் கொன்றது
நாங்கள்தான் என்று புகைப்படத்தை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. மற்றொரு தாதா கோஷ்டியான லாரன்ஸ் பிஷ்னோய்-க்கு இன்பார்மராக இவர் செயல்பட்டதால், கொன்றோம் என்று தெரிவித்துள்ளது.
போலீசார் கூறும்போது, நான்கு பேர் ஒரு காரில் வந்து காத்திருந்துள்ளனர். விக்ரம்ஜித் வந்ததும் இரண்டு பேர், காரில் இருந்து இறங்கி வந்து அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் மீது 9 புல்லட்டுகள் பாய்ந்துள்ளன. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இது ரவுடி கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலை என்பதை மறுப்பதற்கில்லை’ என்றனர்.
சினிமா பாணியில், பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூர கொலை சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.








