யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது: உயர் நீதிமன்றம்

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் அதிகம் விரும்பி…

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை மதன் குமார் என்பவர் நடத்தி வருகிறார்.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பெண்களை அவமரியாதையாக பேசுவது, சிறுவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்ற விடியோ பதிவுகளை பதிவிட்டுள்ளார். இந்த யூடியூபுக்கு பக்கத்தில் இதுவரை 7.8 லட்சம் பேர் தங்களை இணைத்து கொண்டுள்ள்ளனர்.

இந்நிலையில் ‘பப்ஜி’மதன் சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக சைபர் க்ரைம் பிரிவு காவல்துறை, மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். அதன்பின்னர் ‘பப்ஜி’ மதன் தலைமறைவானார்.

இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள் எனவும், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

அவருடைய யூடியூப் அட்மினாக இருந்த உதவிய அவரது மனைவி நேற்று கைது செய்யப்பட்டு ஜூன் 30-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார். அந்த பதிவுகளை முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

அதேசமயம் மதனின் யுடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடி-யாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.