தொடர் மழையால், டெல்லி தலைமை செயலகத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அரசு அலுவலகர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கெனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் டெல்லி அரசு மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய அளவைத் தாண்டியது. இதனால் டெல்லி செங்கோட்டை பகுதி, காஷ்மீரி கேட், யமுனா பஜார், சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் 16ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 12 குழுகள் வெள்ள நீரில் சிக்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். வெள்ளப்பகுதிகளில் இருந்து 23,692 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா