உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். விராட் கோலி, கே.எல்.ராகுல் இணை பொறுப்பாக விளையாடினர்.
இதனால் அணியின் ரன்கள் உயர தொடங்கியது. கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களில் லிட்டன் டாஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதேபோல், வங்கதேச அணியில் நூரூல் ஹசன் 25 ரன்களும், நஜ்மல் ஹூசைன் 21 ரன்களும் எடுத்தனர். இதனிடையே, ஆட்டத்தின் இடையே மழை குறிக்கிட்டது.
இதனால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, 151 ரன்கள் இலக்ககாக எடுத்து கொள்ளப்பட்டன. 54 பந்துகளில் 85 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், ஹர்த்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.










