டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக விளையாடியபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரிஷ்வான் 15 ரன்களிலும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய ஷான் மசூத் தனது பங்கிற்கு 38 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக பந்து வீசியது. அந்த அணியில் சாம் கரன் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக்கோப்பையும், பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.