உலகக்கோப்பை 2023: இந்திய மைதானத்தை ஆய்வு செய்யும் பாகிஸ்தான் பாதுகாப்பு குழு!

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும் மைதானங்கள், மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்புக் குழு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு…

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும் மைதானங்கள், மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்புக் குழு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை  வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான்  அணி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை ஐசிசி  நிராகரித்தை தொடர்ந்து  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் மைதானங்கள், அவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்புக் குழு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தூதுக்குழு இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டிக்கு வரும் பாகிஸ்தான் வீரர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடி ஆய்வு செய்ய உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.