புறா வளர்ப்பால் இரண்டு நுரையீரலும் செயலிழந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு சுமார் 8 மணிநேரமாக நடைபெற்ற அறுவை சிசிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த குஜாரத்தை சேர்ந்த திம்பால் ஷா என்ற 42 வயது பெண்மணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மிகவும் கடினமான, சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இவரது நோய்க்கும், புறாக்களுக்கும் தொடர்பு இருப்பதாக அறியப்படுகிறது. நார்த்திசு நுரையீரல் நோய் இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் ஏற்படுகின்ற புறா வளர்ப்பவர்களின் நுரையீரல் நோய் அல்லது மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி எனவும் இந்நோய் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனையின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா கூறியதாவது:
தூய்மையான சுற்றுச்சூழலை நாம் பராமரிப்பது முக்கியம். பல ஆண்டுகளாக பறவைகளின் கழிவுகள், எச்சங்கள், தூசி சூழ்நிலையில் வாழும் நபர்களுக்கு சரிசெய்ய இயலாத நுரையீரல் சேதம், மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி மற்றும் நாட்பட்ட சுவாசப்பாதை செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என தெரிவித்தார்.







