மத்தியப் பிரதேசத்தில் நடப்பட்ட மரம் ஒன்று இரவு பகலாக 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன், லட்சக்கணக்கில் செலவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது. இதனை ‘போதி மரம்’ என்று அழைக்கிறார்கள்.
பொதுவாக மரம் வளர்ப்பது என்பது சுலபமான விஷயம் என்றாலும், எந்த மரத்தை வளர்க்கிறோம் ? அந்த மரம் முழுமையான வளர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு ? இதற்கு இடையில் அந்த மரம் சந்திக்கும் இயற்கை இடையூறுகள் என்னென்ன ? போன்ற பலவிஷயங்கள் அந்த சுலபத்தையும் பல நேரம் சிரமாக மாற்றி விடுகிறது. ஆனால் இங்கு அது மட்டும் விஷயம் அல்ல, மத்தியப் பிரதேச மாநிலம் ரைசெனில் உள்ள சாஞ்சி ஸ்தூபிக்கு அருகில் நடப்பட்ட மரம் ஒன்று அதையும் தாண்டிய பல விஷயங்களை எதிர்பார்க்கிறது. அதுதான் இரவு பகலாக 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு மற்றும் அந்த மரத்தை எந்த சிக்கலும் இல்லாமல் பாதுக்காக்க லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அது என்ன இந்த மரத்திற்கு மட்டும் இப்படி ஒரு ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம் ? அதற்கான விடையை தெரிந்து கொள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பின்நோக்கி நாம் செல்ல வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வட இந்தியாவில் ஒரு மரத்தடியில் தியானம் செய்தபோது ஞானம் பெற்றதாகக் கூறப்படும் கதையிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. அந்த மரம் போதி மரம் அல்லது ஞான மரம் என்று அறியப்பட்டது. கிமு 250 இல், பேரரசர் அசோகர் அதைப் பார்வையிட்டார் மற்றும் அங்கு ஒரு கோவிலையும் உருவாக்கினார். பின்பு ஒரு சமயம் அசோகர் தனது தலைநகரான அனுராதபுரத்தில் நட்டு வைத்த மரத்திலிருந்து, மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவுக்கு பரிசாக ஒரு கிளையை இலங்கைக்கு அனுப்பினார்.
இப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அந்த கிளை பின்னர் பெரிய மரமாகி , கடந்த 2012ல் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்தர ராஜபக்சே, அந்த மரத்தில் இருந்து மெல்லிய கிளையை இங்கு கொண்டு வந்து, மத்தியப் பிரதேச மாநிலம் சலாமத்பூர் அருகே உள்ள மலைப்பகுதியில், அப்போதைய ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நட்டு வைத்தார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அந்த கிளை தற்போது மரமாக வளர்ந்துள்ளதுடன், இதுவரை சுமார் 64 லட்சம் ரூபாய் செலவழித்து மரத்திற்கு பாதுகாப்பான தண்ணீர் பாய்ச்சியுள்ளதாகவும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் இன்று வரை வளர்க்கப்பட்டு வருவதாகவும் தகவல். இருப்பினும், தற்போது அந்த மரத்தை இலைப்புழு என்ற பூச்சி தாக்கியதால், மரத்தின் இலைகள் காய்ந்து வருவதாகவும், மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதுகாப்பு ஊழியர்கள் கூறுகின்றனர்.
பி.ஜேம்ஸ் லிசா