10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் துடிப்போடு வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. தொடர் தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வேகத்தோடு நாடு தழுவிய பாதயாத்திரைக்கு தயாராகி வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது ராஜினாமாவைவிட ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கும் காரணங்கள் காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரசிலிருந்து விலகும் முடிவை தாம் ஏன் எடுத்தேன் என்பதை விரிவாக விளக்கியுள்ளார். இப்படி பகிரங்கமாக தெரிவித்த காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், குலாம் நபி ஆசாத்தின் விலகலின் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் உலாவுகின்றன. அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஜி23 குழுவை தொடங்கியது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்களிடையே கிளம்பிய சலசலப்புகள், குலாம் நபி ஆசாத்தின் தலைமையின் கீழ் ஜி23 குழுவாக உருவெடுத்தது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு எதிராக கடிதம் எழுதிய ஜி23 தலைவர்கள், கட்சியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் வலுவான தலைமை தேவை என்றும் பகிரங்கமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஜி23 குழுவை தொடங்கியது காங்கிரசிலிருந்து குலாம் நபி ஆசாத் வெளியேறுவதற்கான ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி
மூத்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான குலாம் நபி ஆசாத் 22 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ந்தேதி முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துவந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு பிப்ரவரி 15ந்தேதி ஓய்வு பெற்றார். காங்கிரஸ் கட்சித்தலைமை நினைத்திருந்தால் அவரின் நாடாளுமன்ற பயணத்தை மேலும் தொடரச் செய்திருக்கலாம் ஆனால் இந்த முறை குலாம் நபி ஆசாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவும் குலாம் நபி ஆசாத்திற்கு காங்கிரஸ் தலைமை மீதும், ராகுல்காந்தி மீதும் வெறுப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குலாம் நபி ஆசாத்திற்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியை காஷ்மீரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்ற ஜி23 காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் கபில் சிபல்.
”ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரசின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று அறிந்தவர் குலாம் நபி ஆசாத், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது”
என்று கூறிய கபில் சிபல், குலாம் நபி ஆசாத்தின் அனுபவம் கட்சிக்கு தேவையில்லை என காங்கிரஸ் தலைமை நினைக்கிறதா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் நெருக்கம் காட்டினாரா?
கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரசில் ஜி23 குழுவை தோற்றுவித்த குலாம் நபி ஆசாத், அதன் பின் பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறார் என்கிற விமர்சனத்திற்கு உள்ளானார். மாநிலங்களவையில்
குலாம் நபி ஆசாத்திற்கு நடந்த பிரிவு உபச்சார நிகழ்வில் அவருக்கும் தனக்குமான நட்பை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு கலங்கிய சம்பவத்திற்கு பின்னர் காங்கிரசில் குலாம் நபி ஆசாத் மீதான விமர்சனம் அதிகரித்தது.
கடந்த மார்ச் மாதம் குலாம் நபி ஆசாத்திற்கு நாட்டின் 3வது பெரிய விருதான பத்மபூசன் விருது மத்திய பாஜக அரசால் வழங்கப்பட்டது. பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாலேயே அவருக்கு இந்த விருது கிடைத்ததாக காங்கிரசில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர். மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெல்லியில் அவர் வசித்த அரசு பங்களாவில் கூடுதல் காலம் தங்கியிருக்க மத்திய பாஜக அரசு அனுமதித்ததும் காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. இதைத்தான் முதலில் பிரதமர் மோடி கண்ணீர் சிந்தினார், பிறகு பத்மபூஷண் விருது கிடைத்தது, அதன் பின் அரசு பங்களா நீட்டிப்பு கிடைத்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து வருகிறார். காங்கிரசிலிருந்து வெளியேறுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்த உடனேயே பாஜக மூத்த தலைவர் குல்தீப் பிஷ்னோய், தங்கள் கட்சியில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்திருப்பதையும், காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரச்சாரக் குழுவிலிருந்து விலகல்
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத் தீவிரம் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை சர்ச்சையை மேலும் அதிகரித்தது. ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த பதவியிலிருந்து அவர் திடீரென விலகினார். கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விரைவில் விலகுவார் என்பதற்கான அறிகுறியாக இந்த சம்பவம் கருதப்பட்டது.
காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்
மாநில அரசியலுக்கு மீண்டும் திரும்புவதற்கு வசதியாக காங்கிரசிலிருந்து குலாம் நபி ஆசாத் வெளியேறியுள்ளதாகவும்
தகவல்கள் கூறுகின்றன. தமது மாநிலத்தில் புதிய கட்சி ஒன்றை தொடங்கும் யோசனையில் இருப்பதாக காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கினால் ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக யூகிக்கப்படுகிறது. 370வது சட்டப்பேரவை நீக்கிய பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள முதல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கவுரவப் பிரச்சனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.