கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார். கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய மாணவர்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் வழிகாட்டிகளாக திகழ வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர், அனைவரும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாலை 4 – 6:30 மணி வரை காவல்துறை அலுவலர்களுக்கான கூட்டமும், சாதனைபுரிந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மாநாட்டில் முதன் முறையாக வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







