இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அறிவித்துள்ளதைவிட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிடும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அளித்துள்ள தகவலோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக சுகாதர நிறுவனத்தின் இந்த அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, நமது நாட்டில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, உலக சுகாதர நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிகை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
கொரோனா மரணங்கள் ஏற்படத் தொடங்கியபோது, அது குறித்த வரையறை நம்மிடம் இருக்கவில்லை என தெரிவித்த டாக்டர் பல்ராம் பார்கவா, அப்போது உலக சுகாதர நிறுவனத்திடமும் அத்தகைய வரையறை இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா மரணங்களில் 95 சதவீதம், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 4 வாரங்களுக்குள் நிகழ்ந்துள்ளதை தரவுகள் உறுதிப்படுத்தியதால், கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் உயிரிழப்பவர்களை மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று கருதுவது என முடிவெடுக்கப்பட்டதாக டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதேபால், கொரோனா தடுப்பூசி குறித்த தரவுகளையும் திட்டமிட்ட ரீதியில் நாம் சேமித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு 130 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் இதுவரை 190 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்மிடம் உள்ள தரவுகள் நம்பகத்தன்மை மிக்கவை என்று தெரிவித்துள்ள டாக்டர் பல்ராம் பார்கவா, எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை பொருட்படுத்த வேண்டியதில்லை என கூறியுள்ளார்.