தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் பற்றி பார்க்கலாம்.
மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.வி.ரவிசந்திரன் யார்?
- ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் டி.வி. ரவிச்சந்திரன்.
- இவரின் தந்தை, அந்த மாநில அரசின் வனத்துறை செயலாளராக இருந்தவர்.
- டி.வி. ரவிச்சந்திரன் தமிழ்நாட்டின் பல நகரங்களில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர்.
- நாகர்கோவிலில் ஏஎஸ்பியாக முதன் முதலில் பணியில் இணைந்தார்.
- பின்னர் கடலூர் எஸ்பி, தமிழ்நாடு காவல்துறை கியூ பிரிவு எஸ்பி, ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை எஸ்பியாகவும் பதவி வகித்தவர் டி.வி.ரவிச்சந்திரன்.
- 2000-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு சென்ற டி.வி.ரவிச்சந்திரன், IB-ல் டெல்லியில் பணியாற்றினார்.
- IB இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
- ஜெர்மனியின் பெர்லினில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணி புரிந்தார்.
- 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் உளவு அமைப்பான IB கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- பின்னர் 2023-ல் உளவுத்துறை சிறப்பு இயக்குநராக பதவி வகித்த நிலையில் தற்போது தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.







