மதுரை ரயில் நிலையம் அருகே, சுற்றுலா ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்த போது அங்கிருந்து தப்பி ஓடிய 5 பேரை பிடித்து மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆன்மீக சுற்றுலா வந்த 63 பேரில், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் பெட்டி தீ விபத்தின் போது அங்கிருந்து தப்பியோடிய 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதில் 3 பேரை மட்டும் தற்போது மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி முன்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி எம் சவுத்ரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை ரயில்வே விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும். சம்பவம் தொடர்பாக கைது குறித்த கேள்விக்கு அது தொடர்பாக காவல்துறையினர் தான் முடிவு செய்வார்கள்
விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி எம் சவுத்ரி கூறினார்.