வெங்கட் பிரபு இயக்கும், விஜய்யின் 68வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் லியோ படமே ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தொடர்ந்து சில நாட்களாக வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அண்மையில் தளபதி 68 படத்திற்கான தலைப்பு ’சிஎஸ்கே’ என வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘தளபதி 68’ படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன. அதன்படி விஜயின் இந்த படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







