10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும் எனவும், இதற்கான அட்டவணை மற்றும் விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நிறைவடைந்தது. இந்த தேர்வை 12,616பள்ளிகளிலிருந்து 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும் எனவும், இதற்கான அட்டவணை மற்றும் விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் இணைந்து ‘தொடா்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த வகுப்புகள் மே 13-ஆம் தேதி தொடங்கி, துணைத்தோ்வுகள் நடைபெறும் நாள்கள் வரை மாணவா்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.
இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியா் வல்லுநா்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தோ்வு மதிப்பெண்கள் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்பட்டு, தொடா்ந்து மாணவா்களை ஊக்குவித்து துணைத் தோ்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.








