மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி ஒன்றிய அரசு அறிவித்த, அடுத்த நாள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ராமசாமி படையாட்சியரின் ஆவண படத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் வெளியிட்டனர். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட ராமசாமி படையாட்சியரின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ராமசாமி படையாட்சியருக்கு சிலையை நிறுவி திறந்து வைத்தார்.
பிறகு காய்ச்சல் குறித்து பேசிய அவர், குழந்தைகளுக்கான காய்ச்சல் குறித்து கவனம் செலுத்தி அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஒப்பிடும் பொழுது இது சராசரியான ஒன்றுதான், இருந்தாலும் தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். எனவே, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி ஒன்றிய அரசு அறிவித்த அடுத்த நாள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.