ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும்,
மருந்து தட்டுப்பாடு உள்ளதுபோல் ஒரு சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே
போராட்டம் நடத்தி வருவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் பகுதியில்
உள்ள அவரது உருவ சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:
ஆதித்தனார் நினைவைப் போற்றுவதில் பெருமை கொள்கிறேன். பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் படிக்க முடியும் என்று இல்லாமல் எழுத்துக் கூட்டி படிப்பவர் கூட படிக்க முடியும் என்ற அளவுக்கு எளிய முறையில் பத்திரிகையை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார்.
எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு குண்டு வீச்சு சம்பவமும் வன்முறை சம்பவங்களும் நடைபெறக் கூடாது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது.
ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும். அது தவறும்போது பலரை கோபமுறச் செய்கிறது. எந்த வகையிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அமைதியோடு கூடிய பாதுகாப்பு அன்பு உணர்வு இருக்க வேண்டும்.
ஆளுநர் எப்படி நடந்து கொள்கிறார் என்று என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு
தெரியும். அண்ணன் ரங்கசாமி மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்தால் நான்
உடன் இருப்பேன். முதன்மை ஆளுநராக தான் செயல்படுகிறேனே தவிர முதலமைச்சராக இல்லை.
எவ்வளவு விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை. என்றைக்கும் மக்களுக்காக செயல்படுகிறேன். எல்லோரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும்.
அமைதி பேரணி தான். அதை ஏன் தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்
சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது என்றார்.
மேலும், புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என ஒரு சில கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருகிறது என்றார் தமிழிசை செளந்தரராஜன்.








