பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள ஏம்பக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல்…

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள ஏம்பக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக் கூடியது மீன்பிடித் திருவிழா நடைபெறுவது  வழக்கம்.  கடந்த ஆண்டுகளைப் போன்று நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், ஊர் ஒற்றுமையாக இருக்கவும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி,  இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடி திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் ஏம்பக்கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள மடை கருப்பரை வழிபாடு செய்த பின்னர் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர்.

அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால், அயிரை ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.