சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர், ஹெல்மெட் அணிந்திருந்தும், விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. 30 வயதான இவர் உணவு டெலிவரி செய்யும் சொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்வதற்காக மணலி நோக்கி சென்றார். அப்போது கார்கில் நகர் பக்கிங்காம் கெனால் சாலை வழியாக செல்ல வாகனத்தை திருப்பிய அவர், கண்டெய்னர் லாரியை முந்த முயன்றுள்ளார்.
அப்போது தடுமாறி கீழே விழுந்த முகமது அலி, கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், தலையும் ஹெல்மெட்டும் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போக்குவரத்து போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், கண்டெய்னர் ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்தும், தலை நசுங்கி சொமாட்டோ ஊழியர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







