கிணற்றில் கிடந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என கிணற்றின் உரிமையாளர் புவியியல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷன். இவர் தனது வீட்டு தோட்டத்தின் அருகே கிணறு ஒன்றை தோண்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில் தனது வீட்டின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும்
பயன்படுத்தி வந்துள்ளார்.
கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணத்தில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை சதீஷன் கிணற்றில்
கட்டப்பட்டுள்ள கயிற்றால் அளவு கருவி மூலம் அளந்து குறித்து கொள்வது வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பும் வழக்கம் போல் சதீஷன் கிணற்றின் தண்ணீர் அளவை பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்துள்ளது மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். ஆனால் மறுநாள் காலையில் அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்தது. கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷன், கிணற்றின் அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமா? எனவும் பார்த்துள்ளார். மேலும் மாயமான தண்ணீர், அருகில் உள்ள கிணறுகளில் தேங்கி இருக்குமா எனவும் பார்த்துள்ளார். ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.
எனவே அதிர்ச்சியடைந்த சதீஷன் இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அதிகாரிகள் சதீஷன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டனர். ஒரே நாள் இரவில்
18 அடி தண்ணீரும் மாயமாக வாய்ப்பு இல்லை எனக்கூறிய அதிகாரிகள், இது எப்படி நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வுக்கு பின்னரே இதற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








