மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரை முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும், இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் மதுரை 293வது ஆதீனம் பேசியிருந்தார்.
மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சு, விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மதுரை ஆதீனத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டிகளில், “எச்சரிக்கை… மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா” என்ற வாசகங்களோடு “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து, எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை, தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு எதிரான விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் ஏற்கனவே அரசியல் ரதீயாக பேசிய கருத்துகள் பேசுபொருளாகிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதீனம் இருவர்களிடையேயான போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க – முந்தைய செய்தி –







