நகர்புறங்களில் மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி கூட்டுறவு கடைகளில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த துறையை பொறுத்த வரைக்கும் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலன் இரண்டு கண்களாக உள்ளது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மதுரையில் 174 உள்ளது. இதனை கூட்டு உயர்வு நாட்டு உயர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அதனை கடன் கொடுக்கும் மையமாக மட்டுமல்லாது பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளது போன்று 5 கிலோ கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் திட்டத்தினை வருகிற 6-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் 238 கோடி மதிப்பீட்டில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் கிடங்குகள் கட்ட முடிவுகள் செய்யப்பட்டு தற்போது மதுரை தோப்பூரிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தார்ப்பாய்களால் மூடும் நிலையினை மாற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மக்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வருவதற்கு பருப்பு விலையை விட நியாய விலை கடைகளுக்கு வரும் ஆட்டோவின் விலை
அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நகர்ப்புறங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருக்கும் இடங்களில் கூடுதலாக ரேஷன் கடை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
கடந்த மாதங்களில் ரேசன் அரிசி கடத்தப்பட்டதாக 13,008 வழக்குகள் பதிவு செய்து 13 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், இதில் 113 பேரை குண்டர் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
-இரா.நம்பிராஜன்