“சமூகநீதியை காக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்…” – தருமபுரியில் சீமான் பேச்சு

சமூகநீதியை பாதுகாக்க போராட்டிக் கொண்டிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

சமூகநீதியை பாதுகாக்க போராட்டிக் கொண்டிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது :

“எங்கள் கண் முன்னே,  எங்கள் வளம் களவுபோகிறது.  கிருஷ்ணகிரி,  தருமபுரி மாவட்டங்களில் உள்ள மலைகள்,  நொறுக்கப்பட்டு மணலாகவும் கற்களாகவும் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  இதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இல்லாததால்,  ஒரு மிகப்பெரிய துயரம் நடந்து கொண்டிருக்கிறது.  மலைகள் இல்லாத நிலம் பாலைவனம் ஆகிவிடும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களுக்கு,  ஆட்சி அதிகாரங்கள் கொடுத்துவிட்டு நாங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  இதை தடுப்பதற்கும் எங்கள் நிலத்தை காப்பதற்கும் இந்த மண்ணின் பிள்ளைகளாகிய நாங்கள் மாற்றத்திற்கான அரசை முன்னெடுக்கிறோம்.

நீண்டகாலமாக நாங்கள் தனித்துப் போட்டியிடுகின்றோம் என்பதை கவனித்து இருப்பீர்கள்.  எங்களது அரசியல் முழுக்க முழுக்க வேறானது.  ஆணுக்குப் பெண் சமமானவர்கள் என்றார்கள்.  நாங்கள் ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்.  சட்டசபை தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல்,  நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் நம் குல பெண்களுக்கு சமவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.  சமூக நீதியை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் நாங்கள். அதன் அடிப்படையிலேயே வாய்ப்புகள் கொடுக்கிறோம்.

இதே தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதி பேசிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.  இதே திமுக அன்று பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது பாஜக சமூகநீதி பற்றி பேசிக்கொண்டிருந்ததா?  அவர்களுடைய கோட்பாடு சமூகநீதிக்கு எதிரானது.  அப்போது நீங்கள் எதற்கு கூட்டணி வைத்தீர்கள்? இவர்கள் திடீர் திடீர் என்று புனிதம் ஆகிவிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!

குடிவாரி கணக்கெடுங்கள்,  சாதிவாரி கணக்கெடுங்கள் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  இந்த திராவிட கட்சிகள் எதுவும் சாதிவாரி கணக்கு எடுக்கமாட்டார்கள்.  எங்களுடைய கோட்பாடு வேறு. எடுத்துக் கொடுக்காதீர்கள்,  எண்ணி கொடுங்கள்.  அள்ளிக் கொடுக்காதீர்கள், அ ளந்து கொடுங்கள் என்று சொல்கிறோம்”

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.