“இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. உதவிகளை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கேரளாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசு இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்பும் தேவையான உதவிகளை செய்து வந்தது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வர இலங்கை அரசும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அகதிகளாக யாரும் இப்போது அந்நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றார் ஜெய்சங்கர்.
“இதுவரை 44,000 மெட்ரிக் டன்கள் யூரியா இலங்கைக்கு கடனுதவியாக இந்தியா அளித்துள்ளது. இதன்மூலம் உணவுப் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை மிகத் தீவிரமடைந்துள்ளதால் பெட்ரோல், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட பலவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. நாடு திவாலாகி விட்டது போன்ற சூழல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறும் அளவிற்கு அங்கு பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அதிபர் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் மக்கள் நுழைந்தனர். இதை முன்கூட்டியே அறிந்து கோத்தபய ராஜபட்சே நாட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








