’தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம்’- கிங்டம் தயாரிப்பு நிறுவனம்!

கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி ஜூலை 31ல் திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இலங்கையை அடிப்படியாக கொண்டு கதையமைக்கப்பட்டுள்ள
கிங்டம்’ தற்போது வரை 80 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் படம் வெளியானதை தொடர்ந்து, திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழ் நாட்டில் கிங்டம் படம் வெளியான திரையரங்குகள் சில நாம் தமிழர் கட்சியினரால் முற்றுகையிடப்பட்டது.

இந்த நிலையில் கிங்டம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”கிங்டம் திரைப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப் பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.