“வஃக்பு சட்டத் திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” – கனிமொழி ஆவேசம்!

“வஃக்பு சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” என மக்களவையில் கனிமொழி தெரிவித்தார்.  இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு…

“வஃக்பு சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” என மக்களவையில் கனிமொழி தெரிவித்தார். 

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்டதிருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த வஃக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல” என்று விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.