ஓமலூர் அருகே துப்பாக்கி செய்த இரண்டு வாலிபர்களை போலீஸ் காவலில் எடுத்து
விசாரித்த போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பன் பாணியில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக செய்ததாக தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி என்ற இடத்தில் கடந்த 20ஆம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர். அப்போது இரண்டு வாலிபர்களும் யூடியூப் சேனலை பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை ஓமலூர் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்தனர். இதில், அவர்கள் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவர் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த கத்தி, துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் முகமூடி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மேலும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்ற காவலில் எடுக்க மனு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றம் அவர்கள் இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2 நாட்களாக ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிராஞ்ச் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இந்த விசாரணையில் இரண்டு வாலிபர்களும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில் துப்பாக்கி தயாரிப்பதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் ஆகியோரின் வழியில் பொது மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளராக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். மேலும் இந்தத் துப்பாக்கி தயாரிக்கும் செயலில் நவீன் என்பவருடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த வகுப்பு தோழன் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் இருந்ததாக ஒப்புக்கொண்டனர் . இதை தொடர்ந்து இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் கபிலர் என்ற வாலிபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இவர்கள் மூன்று பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.