29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக


மரிய ரீகன் சாமிக்கண்ணு

நலவாழ்வு திட்டங்கள் மூலம் தேர்தல் வெற்றி வியூகங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. இதற்கு பின் இருக்கக் கூடிய அரசியல் என்ன? தேர்தல் வரலாற்றில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மக்கள் நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு யாரிடம் இருந்து நிதியை திரட்டுகிறது? விரிவாக பேசுகிறது இந்த கட்டுரை…

தேச பக்தியும் நலவாழ்வு திட்டமும் :  

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாஜக வழக்கமாக தேச பக்தி, கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை போன்ற விஷயங்களை அரசியலாகக் கொண்டு அதன் அங்கமாக தேர்தல் வெற்றியை பயன்படுத்திக்கொள்ளும். மத நம்பிக்கை, அல்லது தேச பக்தி எல்லா நேரங்களிலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது என்பதால் நலவாழ்வு திட்டங்களை பாஜக தற்போது கொண்டு வருகிறது. தேர்தலைக் கணக்கில் வைத்து இந்த நலவாழ்வு திட்டங்களை பயன்படுத்துகிறது. நலவாழ்வு திட்டங்களே இல்லாத ஆட்சியை அமல்படுத்துவதற்கு நலவாழ்வு திட்டங்களை பாஜக பயன்படுத்துகிறது.

அண்மையில் உத்தரப்பிரதேசம், உத்தராகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை உத்தரவாதப்படுத்துவதற்கு மத்திய அரசு நலவாழ்வு திட்டங்களை அமல்படுத்தியது. முக்கியமாக மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம். உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசும் இலவச ரேஷன் திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமல்படுத்தி வருகிறது. இதே போல், ரொக்கத்தை வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புதல் என்பது போன்ற திட்டங்களை பாஜக முதன்மையாக செய்தது.
விலையில்லா இலவச ரேஷன் பொருட்களுக்கு இரண்டு ஆண்டுகளில் 2,68,349 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மகளிருக்கு ஒரே தவணைத் தொகையாக 30,000 கோடி அளித்துள்ளது. ஆண்டுக்கு விவசாயிகளுக்கு 6,000 என்ற விகிதத்தில் ஆண்டுக்கு சுமார் 50,000 கோடியை அளித்துள்ளது. இதே போல, நேரடி ரொக்க உதவித் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் நலவாழ்வு திட்டங்களுக்கு இதுவரை ஆண்டுக்கு சுமார் 2,25,000 கோடிக்கும் கூடுதலான தொகையை மத்திய அரசு செலவழித்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவினால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் இளைஞர்கள், பொதுமக்களின் வேலைக்கு வேட்டு வைத்துள்ளது. சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். தவிக்கின்றனர். இங்கு தான், நலவாழ்வு, தேர்தல் வெற்றி என்ற வியூகத்தோடு ஐந்து மாநில தேர்தல் வெற்றியை பாஜக செயல்படுத்தி காட்டி வெற்றி பெற்றுள்ளது.

நலவாழ்வு திட்ட தேர்தல் யுக்தி:

பாஜகவின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான திட்டத்தை தொடங்கினாலும் கூட அதைக் காட்டி வெற்றி  பெற முடியாது என்பதால் நலவாழ்வு திட்டங்களை பயன்படுத்தி உத்தரப்பிரதேசம், உத்தராகாண்ட் தேர்தலில் பாஜக வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை சுவைத்த பாஜக அதே யுக்தியை இமாச்சலப்பிரதேசத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. நகர்மயமாகாத இமாச்சலப்பிரதேசத்திலேயே நகர்ப்புற வேலை வாய்ப்பை பாஜக அமல்படுத்த நினைக்கிறது என்றால் அந்த அளவிற்கு நெருக்கடி அங்கு உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

குஜராத்திலும் நலவாழ்வு திட்டங்களை பாஜக அமல்படுத்துகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளிலேயே பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார். நலவாழ்வு திட்டங்களுக்கு  ஐந்து மாநில தேர்தலில் வெற்றி கிடைத்துவிட்டது என்பதால், குஜராத்திற்கான பல முக்கியமான நலவாழ்வு திட்டங்களை மார்ச் 11 ஆம் தேதி அறிவித்து தேர்தல் வெற்றிக்கான விதையை பிரதமர் மோடி விதைத்துள்ளார்.

மத அரசியலை பாஜக கையில் எடுக்கிறது என காங்கிரஸ், திமுக, திர்ணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாத பாஜக நலவாழ்வு திட்டங்கள் மூலம் வெற்றியை பதிவு செய்யும் உத்தரவாதத்தை உறுதி செய்துவிட்டது. இது ஒரு வகையில் பாஜகவின் அல்லது இந்துத்துவாவின் தோல்வியாக கூட பார்க்கலாம். அதே நேரத்தில், நல வாழ்வு திட்டங்களை முழுமையாக பயன்படுத்துவதையும் பாஜக கைவிடாது. பயன்படுத்த முடியாத அளவிற்கு கூட அதற்கு ஒரு நெருக்கடி உள்ளது.

நெருக்கடியை சந்தித்துள்ள பாஜக:

பாஜக தனது சித்தாந்தத்தை முழுமையாக சார்ந்து இருக்காமல் நலவாழ்வு திட்டங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றம் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.  பாஜகவின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியே அதற்கு காரணம். இந்த வகையில், பாஜக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. மக்களின் பிரச்னைகள் மேலே வருகின்றன. இந்த மக்களின் பிரச்னைகள் மேலே வரும் போது, அரசியல் ரீதியாக கடந்த காலங்களில் பாஜக செயல்படுத்தி வந்த அல்லது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி வந்த தேர்தல் வியூகங்களை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது, தேச பக்தி, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை போன்றவற்றிக்கு மாற்றாக நலவாழ்வு திட்டங்களை துணையாகக் கொண்டு தேர்தல் வெற்றியை உறுதி செய்யலாம் என்ற எல்லைக்குள் வந்து நிற்கிறது.

பாஜகவின் தேர்தல் வெற்றி : வரி – வாழ்வு – வாக்கு :

இன்றைய அரசியல் சூழலில்  தேர்தல் வெற்றிக்காக பாஜக மூன்று ‘வ’க்களை கையில் வைத்துள்ளது. அதாவது, வரி,நல வாழ்வு, வாக்கு இந்த மூன்று வரிசையில் அமைந்த தேர்தல் வியூகத்தின் மூலம் தான் பாஜக வெற்றியை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி விகிதத்தை 22 சதவிகிதத்தில் இருந்து – 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. புதிய முதலீடுகள் மீதான வரியை 15 சதவிகிதம் வரியை அறிவித்துள்ளது. செல்வ வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரி பொருட்கள் மீதான வரி மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இதன் சுமையை மக்கள் இன்று சுமந்து கொண்டு தான் அலுவலகங்களுக்கும், அன்றாட வேலைக்கும் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இதன் மூலம் கிடைக்க கூடிய லாபத்தின் சிறிய பகுதியை மக்களின் நலவாழ்வுக்காக பாஜக பயன்படுத்தி தேர்தல் வெற்றியைப் பெறுகிறது. அதாவது, மக்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு திட்டங்களையும் பாஜக நடைமுறைப்படுத்துகிறது.
ஒருபுறம் மக்கள் மீதான சுமையை அதிகரிக்கும் வரி விதிப்பு கொள்கையும் அதற்கு நேர் எதிராக மக்களின் நலவாழ்விற்கான திட்டங்களையும் ஒருசேர செயல்படுத்துகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மக்களிடம் நிலவிய அதிருப்தியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக தன் மீதான அதிருப்தியை ஈடுகட்டுவதற்காக தற்போது நலவாழ்வுத் திட்டங்களை பயன்படுத்துகிறது.

  • எழுத்து : மரிய ரீகன் சாமிக்கண்ணு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading