பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் மனதளவில் வென்று விட்டீர்கள் என்று விராத் கோலியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடந்த போட்டியில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் இந்திய அணி பேட்டிங் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நினைத்தது போலவே, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் , அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகளை முதலிலேயே வீழ்த்தி திணறடித்தது, பாகிஸ்தான். பிறகு முழுக் கட்டுப்பாட்டையும் அந்த அணி கையில் எடுத்ததால், இந்திய அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களும் விளாசினர்.
போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களை நோக்கி சென்ற கேப்டன் விராத் கோலி, முகமது ரிஸ்வானின் ஆட்டத்தை பாராட்டினார். அவரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வாழ்த்தினார். அதே போல, பாபர் அசாமுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், விராத் கோலியின் செயலை பாராட்டித்தள்ளியுனர். விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும் என்றும் இந்த புகைப்படம் பேசாத வார்த்தைகள் அதிகம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.