31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு டிஜிபி உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை தவறானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனாலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், மாணவி படித்த தனியார் பள்ளியில் தற்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே புகுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ளது. பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால், போராட்டம் தொடர்பாக வீடியோ காட்சிகளை வைத்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இருந்தபோதிலும் போராட்டம் கட்டுக்குள் வருவது போன்று தெரியவில்லை. இதனால், வன்முறை தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

உளவுத்துறை ஐஜி ஆசையம்மாள் மற்றும் ஐஜி ஈஸ்வரமூர்த்தியுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் பரவாமல் இருக்க சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading