விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில் அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தலைமையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் காணொளி வாயிலாக சிறப்புkd கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படி விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிப்பது, நிறுவப்பட்ட சிலைகள் கரைக்கப்படும் வரை பாதுகாப்பு அளிப்பது, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது தொடர்பாக விரிவான அறிவுரைகளை டிஜிபி வழங்கி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும், இப்பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் துறையினருக்கு உறுதுணையாக ஆயுதப்படைக் காவலர்களையும், 10,000 பயிற்சி காவலர்களையும், தற்போது பயிற்சி முடித்துள்ள 900 உதவி ஆய்வாளர்களையும், ஊர்க்காவல் படையினரையும் ஈடுபடுத்த டிஜிபி உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் தாமரைக்கண்ணன், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா








