விஜய்-யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தவெக கட்சி தொண்டர்கள் விஜய்-யின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தவெக தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்க்ளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு சேவைகளை செய்து பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் தவெக கட்சியை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் தவெக நிர்வாகி எஸ்.கே.எஸ். நெப்போலியன் ஆகியோர் உடலுறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். மறைவுக்கு பின்னர் தங்களது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக எடுத்து பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தாம்பரம் மருத்துவமனையில் அவர்கள் பதிவு செய்து கொண்டனர்.








