கோவை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது.
பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது. வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான் அனைவரும் (அரசியல் கட்சிகள்) கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆள வேண்டும் என்ற நோக்கம் புதிதாக வாக்களிக்க கூடிய ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் உள்ளது. 35 வயதுக்கு கீழ் உள்ள அனைவரது ஒருமித்த கருத்தாகவும் அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நான் சில நிகழ்ச்சிகளுக்கு செல்கின்ற பொழுது குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடத்தில் பெரியவர்களிடத்திலும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக எங்களிடம் கூறினார்கள்.
வெற்றி என்பது மக்கள் சக்தியால் யாராலும் தடுக்க இயலாது. விஜய் தான் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார், 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக நேரடியாக தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளது குறித்தான கேள்விக்கு அதற்கு காரணம் அவர்களது தோல்வி பயம் தான். தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால் தான் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு சட்டங்களாக வெளியிட்டது குறித்து பேசிய அவர் தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் எவ்வளவு தோல்வி பயம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







