அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசு பதவிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் உள்ளிட்ட எந்தத் தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்திநர் வெளியிடக்கூடாது.
இதை ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும் விஜய்யின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அவரின் உத்தரவின் பெயரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







