கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படிப்புகளுக்கு 2022 – 23ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றவர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா