வெம்பக்கோட்டை அகழாய்வில் தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்புடன் கூடிய ஆண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் உள்ள வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.
வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மேலும் தொல்லியல் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் முன்னோர்கள் வாழ்ந்த அறிவியல் பூர்வ சான்றுகள் கிடைத்துள்ளன.
முதற்கட்ட அகழாய்வில் மட்டும் வெம்பக்கோட்டைபகுதியில் சுமார் 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6 அன்று வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த வெம்பக்கோட்டை அகழாய்வு கண்காட்சியில் சுடுமண் ஆட்டக்காய்கள், சுடுமண் விளையாடுப் பொருட்கள், சுடுமண் உருவங்கள், அடித்தளம், கற்கோடரி, நுண் கற்கால மூலப்பொருட்கள், சுடுமண் பதக்கங்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் புகைப்பான்கள், செவ்வந்திக்கல் மணிகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் பானைகள், கிண்ணங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த நிலையில் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளின் போது, அழகிய வேலைப்பாடுகளுடன் தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1200க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆண் உருவ பொம்மை கிடைத்துள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில்,
ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.








