வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், அரசுடமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதிமுக தரப்பில், நினைவு இல்லம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டுக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும் எனவும், வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆறு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் நினைவு இல்லம் அமைக்க கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மெரினாவில் 80 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது எனவும், சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சாவிகள் ஒப்படைக்கப்படும் முன் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மேல் முறையீடு செல்லத்தக்கதல்ல என கூற முடியாது எனவும், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் சாவிகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் முந்தைய அரசு முடிவுகள் செல்லாது என கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தீபக் தரப்பில், வழக்கை எதிர்கொண்ட மாநில அரசு, மேல் முறையீடு செய்யாமல், தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று, சாவிகள் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நினைவு இல்லம் அமைக்க 70 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஒரு நினைவு இல்லம் போதுமானது எனவும், பொது பயன்பாடா? இல்லையா? என்பதை முடிவு செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது
தீபா தரப்பில், வேதா இல்லம் நிலம் கையகப்படுத்தியதில் நடைமுறை தவறுகள்
உள்ளதாகவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதம் வைக்கப்பட்டது.
வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் எந்த பொது பயன்பாடும் இல்லை எனவும் அரசியல் லாபத்துக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என அதிமுக மறுக்கவில்லை என்றும், தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்த மறுநாளே சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நினைவு இல்லமாக மாற்ற பொது பணத்தை செலவு செய்வதற்கு பதில், மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு யோசனையை ஏற்றும், ஒரு நினைவிடம் உள்ள நிலையில், நினைவு இல்லம் தேவையில்லை என தனி நீதிபதி உத்தரவை ஏற்றும் மேல் முறையீடு செய்யவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும், ஏற்கனவே இரு அதிமுகவினர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்
சண்முகத்தின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
தள்ளிவைத்தனர்.