பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவை, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்து உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய ஸ்தலமாகும். ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு
திறக்கப்படுகிறது. நம்பூதிரிகள் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18 – ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விரதம்
இருந்து, மாலை அணிந்து இன்று கோவை, வடகோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் காலை முதலே பக்தி பாடல்கள் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அவருடன் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் சபரிமலை
யாத்திரைக்கு செல்கின்றனர்.







