மதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை: வைகோ

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியது தொடர்பாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான…

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியது தொடர்பாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

*துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே அவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு? என்று கேட்டார்கள். தேர்தல் நடப்பதை போல வாக்குப் பெட்டி வாங்கி ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வையாபுரி, ம.தி.மு.க.விற்கு வரவேண்டுமென்று வாக்களித்தனர்.

பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம். ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்சியிலும் இல்லாதது. மதிமுகவில் தான் நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் துரை அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும், நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரிக்கு தகுதிக்கு வந்துவிட்டது. மேடையிலும் நன்றாக பேசுகிறார். மதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, வலுவாக உள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.