அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, 19 வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை லால்பாக் பகுதியில் அவிக்னா பார்க் (Avighna Park) சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்தக் குடியிருப்பின் 19 வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்படது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, தீவிபத்து நடந்த வீட்டில் இருந்து, ஜன்னல் வழியாக அருண் திவாரி (30) என்பவர் கீழே இறங்க முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தீவிபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.








