உத்தரகாண்ட்: 26 பேர் பலி – விசாரணை தீவிரம்

உத்தரகாண்ட்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பண்ணா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 28 பேர் உட்பட 30 பேர், உத்தரகாண்ட்டில்…

உத்தரகாண்ட்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பண்ணா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 28 பேர் உட்பட 30 பேர், உத்தரகாண்ட்டில் உள்ள யமுனோத்ரி கோயிலை நோக்கி பேருந்தில் சென்றுள்ளனர்.

பேருந்து உத்தரகாண்ட்டின் உத்தரகாசி அருகே வந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், அனைவரையும் மீட்டனர். இதில், பேருந்தில் பயணித்த 26 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் விரைந்ததார். உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.