சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர்…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள
சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில்,
வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு,
எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க
உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பரிந்துரைத்தது. முதல்கட்டமாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர்கள்
பதவியேற்றனர்.

இந்நிலையில், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக
நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இரு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பின், புதிய நீதிபதிகளை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். அப்போது அவர்கள், புதிய நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

இறுதியில், நீதிபதி சுந்தர் மோகன் அளித்த ஏற்புரையில், அரசு தலைமை வழக்கறிஞர்
சண்முக சுந்தரத்திடம் ஜூனியராக பணியாற்றியபோது, குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார். மேலும், தொழில் முறையில் தனக்கு உதவியாக இருந்த தனது மூத்த வழக்கறிஞர்களின்
பங்களிப்பை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். நீதிபதி குமரேஷ் பாபு தனது ஏற்புரையில், வழக்காடும் முறையை கற்றுக் கொடுத்த ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும், மூத்த வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது.

நீதிபதி சுந்தர் மோகன், சுந்தர் – சுப்புலட்சுமி தம்பதிக்கு 1969ம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர்
சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த அவர், 1991ம் ஆண்டு வழக்கறிஞராக
பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி கே.குமரேஷ் பாபுவின் தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதல் பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கினார். தமிழக அரசின் சார்பில் 2001 முதல் 2002ம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும், 2020 முதல் 2021 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.