மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் தேர்ச்சி அடைந்துவிடுவேன் என்று எனக்கு தெரியும். ஆனால், இந்திய அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று எனக்கு தெரியாது. ஐஏஎஸ் ஆகி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு என்கிறார் மகிழ்ச்சியுடன். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற ஸ்ருதி சர்மா, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கச் சேர்ந்தார். எனினும், ஜேஎன்யூவிலிருந்து இடைநின்ற அவர், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் நிறுவனத்தில் முதுகலை படிக்க சேர்ந்தார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா உறைவிட பயிற்சி மையத்தில் குடிமைப் பணித் தேர்வுக்கு அவர் தயாரானார். இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தம் 23 பேர் அகில இந்திய அளவில் முன்னிலை வகிக்கின்றனர். முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வாலும், காமினி சிங்லா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழக அளவில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ முதலிடம் பிடித்தார். அகில இந்திய அளவில் அவர் 42வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







