உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவர் ஒருவர் சக மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள ஷிக்கர்பூரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் சஞ்சீவ் என்ற மாணவர் டார்சன் என்ற மாணவனுடன் வகுப்பில் பெஞ்சில் அமர்வது தொடர்பாக கடந்த புதன் கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் டார்சனை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக வந்த தனது மாமாவின் துப்பாக்கியை திருடிய சஞ்சீவ் அதனை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார்.
பின்னர் பள்ளியில் இருந்த டார்சனை நோக்கி துபாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த டார்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஷிக்கர்பூர் காவல்துறையினர் சஞ்சீவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறையில் அமர்வது தொடர்பான பிரச்சனையில் ஒரு மாணவர் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







