பயன்படுத்தாத கிரெடிட் கார்டிற்கு ரூ.17,742 பிடித்தம் செய்த பாரத ஸ்டேட்
வங்கி பாளையங்கோட்டை கிளை வாடிக்கையாளரான அரி முத்துக்குமாருக்கு ரூ.20,000 இழப்பீடும் வழக்கு செலவிற்கு ரூ.4,000 வழங்கவும் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார். 43 வயதான இவர்
கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அரசின் ஊதியமும் இந்த வங்கி
கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கி இவரது வரவு செலவு சிறப்பாக இருப்பதை கவனித்து இவருக்கு கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்து இவரை நிர்பந்தம் செய்துள்ளது. இவர் வேண்டாமென மறுத்த நிலையில் அதற்கான கட்டணம் ஏதுமில்லை நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் எனக் கூறிவற்புறுத்தி கிரெடிட் கார்டை கொடுத்ததாக தெரிகிறது.
எவ்வித பயன்பாடும் இன்றி கார்டை அப்படியே கிராம நிர்வாக அலுவலர் வைத்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.200 வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் மாதம் ரூ.326, டிசம்பர் மாதம் ரூ.322 என வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட, அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டை திரும்ப கொடுத்துள்ளார். தனக்கு அந்த கார்டு தேவை இல்லை எனவும் தனது வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்ய வேண்டாம் எனவும் புகார்
அளித்துள்ளார்.
ஆனால், வாடிக்கையாளரை மதிக்காத வங்கி நிர்வாகம் அவரை டெல்லியில்
உள்ள கிரெடிட் கார்டு தொடர்பான நோடல் அதிகாரியையும் , ஹரியானா மாநிலம்
குர்கானிலுள்ள கார்டு தொடர்பான பொது மேலாளர் ஐயும் தொடர்பு கொள்ள
அறிவுறுத்தியுள்ளது.
அவர்களது தொலைபேசி எண் எண்ணுக்கும் புகார் அளித்துள்ளார். இமெயில் மூலமாகவும் தனது புகாரை தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்பட்டு ரூ.17,742 வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
முறையான பதில் எதையும் வங்கி நிர்வாகமும் கார்டுகள் பரிவர்த்தனையை கவனிக்கும் அதிகாரிகளோ தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அரி முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி க்ளாட்சன் பிளஸ்டு தாகூர் வங்கி சேவை குறைபாடு செய்துள்ளது என தீர்ப்பளித்தார் மேலும் நஷ்ட ஈடாக வங்கி சார்பில் ரூ.10 ஆயிரமும், நோடல் அதிகாரியும் கார்டுகளை கவனிக்கும் பொது மேலாளரும் இணைந்து அந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவிற்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என மொத்தமாக 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அதோடு கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.17,742-ஐ வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.17,742 பிடித்தம் செய்யப்பட்டுள்ள
நிலையில் அதனையும் திருப்பி வழங்க நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாட்சன்
பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டுள்ளார்.