ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் கமல்புரா கிராமத்தில் ஜன் சம்வத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
“45 முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிவு செய்யப்படும். இந்த திட்டம் முதியோர் ஓய்வூதிய திட்டம் போல் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரியானா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனை கருத்தில் கொண்டும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.ஹரியானாவில் பெண் கிடைக்காத ஆண்கள் மத்தியப் பிரதேசம், பீகார், கேரளா, அசாம் , மேற்கு வங்கம் தவிர ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.






