கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு கொஞ்சம் கீழே கவனியுங்கள் – ரத்தன் டாடா விழிப்புணர்வு ட்வீட்

மழைக்காலத்தில் கார்களை இயக்கும் முன், மக்கள் தங்கள் கார்களின் அடியில் செல்லப்பிராணிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை சோதனை செய்துவிட்டு பிறகு எடுத்துச்செல்லுமாறு இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள்…

மழைக்காலத்தில் கார்களை இயக்கும் முன், மக்கள் தங்கள் கார்களின் அடியில் செல்லப்பிராணிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை சோதனை செய்துவிட்டு பிறகு எடுத்துச்செல்லுமாறு இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பல்வேறு தொழில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். குறிப்பாக, நாம் சுவையாக சாப்பிட உணவில் போடும் உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், நம் வீட்டுச் சுவற்றில் உள்ள இரும்பு, டிடிஹெச், நகை, டாடா பவர், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ் என ஒவ்வொன்றிலும் ரத்தன் டாடாவின் பங்கு என்பது நிச்சயம் இருக்கும். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பிரபலமானவராக இருப்பதோடு, உலகம் முழுவதுமே டாடா குழுமத்தின் தொழில் நிறுவனங்கள் பறந்து விரிந்து இருக்கிறது.

85 வயதான ரத்தன் டாடா, தற்போது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும், இன்ஸ்டாகிராமில் 83 லட்சத்திற்க்கும் அதிகமான ரசிகர்களையும் கொண்டுள்ளார். அந்த வகையில், தன்னை பின் தொடர்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மனிதம் குறித்த விழ்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மிகவும் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், தெருக்களில் வசித்து வரும் ஏராளமான பூனைகள் மற்றும் நாய்கள் நமது கார்களுக்கு அடியில் தஞ்சம் அடைகின்றன. தஞ்சம் அடையும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு காயங்கள் ஏற்படாமல் இருக்க கார்களை எடுத்து ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு, காருக்கு கீழே ஏதும் இருக்கின்றனவா என்று சரிபார்ப்பது மிக அவசியம். நம் வாகனங்களுக்கு அடியில் அவர்கள் இருப்பது தெரியாமல் இருந்தால் அவர்கள் கடுமையாக காயமடையலாம். சில சமயங்களில் அவை உயிரிழக்க நேரிடும். இந்த பருவ மழை காலத்தில் பெய்யும் மழையின் போது நாம் அனைவரும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கினால் அது மனதிற்கு இதமாக இருக்கும்.

இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் மனிதம் குறித்து ஓவ்வொருவரும் விழிப்புணர்வடையும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/RNTata2000/status/1676133295015247875?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.