நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் இன்டெர்நேஷனல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பான் – இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ”ஜீனி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக “சைரன்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் மோகன்ராஜா 2024ம் ஆண்டு தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறியிருந்தார். இவ்வாறு அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் ஜெயம் ரவி.
தற்போது அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகிகளான கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வேல்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 25வது திரைப்படமாக இந்த இப்படம் உருவாகிறது. மாபெரும் வெற்றி படமான “கோமாளி” திரைப்படத்திற்கு பின் வேல்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் இரண்டாவது முறையாக ஜெயம்ரவியுடன் இணைவது குறிப்பிடத்தக்கது.








