மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான, வேட்புமனுவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தாக்கல் செய்தார்.
15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். வேட்புமனுகள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் குஜராத் (4), மகாராஷ்டிரா (3), ஒடிசா (1), மத்தியப்பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிலிருந்து போட்டியிடுகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டைப் போலவே அம்மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், உமேஷ் நாத் மஹராஜ், மாயா மரோலியா மற்றும் பன்சிலால் குர்ஜார் ஆகிய 4 பேரை பாஜக அறிவித்தது. மற்றொரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
குஜராத் மாநிலத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கோவிந்த்பாய் தொலாக்கியா, மயாங்க்பாய் நாயக் மற்றும் டாக்டர் ஜஷ்வந்த் சிங்பார்மர் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுபோல மகாராஷ்டிரா மாநிலம் சார்பில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்று முன்தினம் பாஜகவில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், மேதா குல்கர்னி மற்றும் டாக்டர் அஜித் கோப்சதே ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.பி.நட்டா இப்போது இமாச்சல பிரதேசம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஆனால் அங்கு போட்டியிடுவதற்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் குஜராத்திலிருந்து போட்டியிடுகிறார். அங்கு காலியாக உள்ள ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான, வேட்புமனுவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் முருகன் ஆகியோர் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாகின்றனர். எல்.முருகன் தவிர மத்தியப்பிரதேசத்தில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களும் புதுமுகங்கள் ஆவர்.