உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்திருந்தது. கெர்சன் நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகமும் கூறியது. ஆனால் இந்த தகவலை மறுத்த கெர்சன் மேயர், தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. உக்ரைன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. போலந்தின் எல்லையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தூதுக்குழுவினர் வருவார்கள் என ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது. இதனை அடுத்து இருதரப்புக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.